Puducherry Admk Anbazhagan,புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும் : அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் – admk will ask for power sharing in puducherry nda alliance

புதுச்சேரியில் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியோடு மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தினார்.இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

முக்கிய அம்சங்கள்:

ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன்

puducherry admk anbazhagan
புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பான சூழலே நிலவி வருகின்றது. ஒருபக்கம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. மறுபக்கம் மீண்டும் பாஜகவுடன் தான் கூட்டணி என அறிவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. இருந்தாலும் சில தினங்களுக்கு முன்பு நடைபெறுவதாக இருந்த தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை ரங்கசாமி புறக்கணித்தார்.மேலும் பாஜகவுடன் கூட்டணியை ரங்கசாமி முறித்துக்கொள்ள இருப்பதாக கூட வதந்திகள் பரவின. ஆனால் தற்போது முதலமைச்சர் ரங்கசாமி தெளிவாக பாஜகவுடன் தான் கூட்டணி என கூறிவிட்டார். அவர்களுடன் தான் பேசிக்கொண்டு இருக்கின்றோம், வேறு யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார் ரங்கசாமி.
எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது பிரச்சனை தீர்ந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் தான் தற்போது புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தன் கருத்தினை கூறியிருக்கின்றார். அவர் கூறும்போது, புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாய கூட்டணி தான் ஆட்சியமைக்கும். புதுச்சேரியில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும். அமைச்சரவையில் அதிமுக கண்டிப்பாக இருக்கும் என திட்டவட்டமாக கூறியிருக்கின்றார் அன்பழகன்.
இந்நிலையில் நேற்று தான் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததாக தெரிகின்றது. என்னதான் என்.ஆர் காங்கிரஸ் இக்கூட்டணியில் இருந்து விலகலாம் என வதந்திகள் பரவினாலும் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கின்றனர்.
கடந்த முறையை போல இம்முறையும் சட்டமன்ற தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியோடு இணைந்து எதிர்கொள்கின்றோம் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிதெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும், 10 தொகுதிகளில் பாஜகவும், தலா இரண்டு தொகுதிகளில் லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் அதிமுக ஆகியோரும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதைத்தொடர்ந்து அதிமுகவிற்கு இரண்டு தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டது என்றால் அவர்களுக்கு எப்படி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என்றும் பலர் பேசி வருகின்றனர். இரண்டு தொகுதியில் வெற்றிபெற்றாலும் அமைச்சரவை மற்றும் ஆட்சியில் அதிகாரம் மற்றும் பங்கு கிடைக்குமா ? என்பது சந்தேகம் தான் என பேசி வருகின்றனர் சிலர். மேலும் இதனால் கூட்டணிக்குள் ஏதேனும் சலசலப்பு உண்டாகுமா ? என்பதும் தெரியவில்லை.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அதிமுகவிற்கு இரண்டு தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டதாக தகவல். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால் அதிமுகவின் ஆட்சி தான் அமையும்.எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராவார். ஆனால் அதுவே புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால் ரங்கசாமி தான் முதல்வராவார்
.
ஆனால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் அதிமுகவிற்கு பங்கு கிடைக்குமா ? என்பது சந்தேகம் தான் என்கின்றனர் சிலர். இவ்வாறு புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகனின் கருத்துக்கள் பேசும்பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இக்கூட்டணியில் புதிதாக இணைந்திருக்கும் கட்சி குறித்தும் ரங்கசாமி பேசியிருந்தார். கூட்டணியை பலப்படுத்த புதிதாக லட்சிய ஜனநாயக கட்சியை இணைத்திருக்கின்றனர் என்றார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுரையின்படி புதிதாக கூட்டணியில் இக்கட்சி இணைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கு வலுசேர்க்கும் விதமாக லட்சிய ஜனநாயக கட்சி இணைந்திருப்பதாக ரங்கசாமி கூறினார். முதலில் லட்சிய ஜனநாயக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்க கூடாது என விடாப்பிடியாக இருந்தாராம் முதலமைச்சர் ரங்கசாமி.

செங்கோட்டையன் பேச்சு… அதிமுகவில் நடக்கவுள்ள மாற்றங்கள்- புகழேந்தி

இதன் காரணமாக தான் முதல்வர் ரங்கசாமி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணித்ததாக சொல்லப்படுகின்றது. ஆனால் தற்போது சுமுகமான முடிவு எட்டப்பட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜோஸ் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயக கட்சியை இணைத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார் ரங்கசாமி என்பது குறிப்பிடத்தக்கது.