நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி சமூக வலைதளங்களில் தரக்குறைவாகப் பேசியதாக எழுந்த புகாரில், பிரபல யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சைபர் கிரைம் போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அறிக்கையை அடுத்த நாளே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், ‘வலைப்பேச்சு’ யூடியூப் சேனலின் பிஸ்மி, தமிழன் கோகுல் உள்ளிட்டோர் சீமானின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் தொடர்ந்து பரப்பி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படும் இந்த அவதூறு பிரச்சாரங்கள் குறித்துக் கடந்த ஜூலை 3ஆம் தேதி காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்பதால், நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் முறையிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சீமான் குறித்து திட்டமிட்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, திமுக எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் தொடர்பான விவகாரங்களில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காவல்துறை, இந்த வழக்கில் மட்டும் ஏன் தாமதம் காட்டுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு தற்போதைய தமிழக அரசியல் சூழலில் சீமான் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக உருவெடுத்துள்ளதை சுட்டிக்காட்டினார். எந்தவொரு அரசியல் தலைவரைப் பற்றியும் அவதூறாகப் பேசுவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் அன்றைய தினமே மாலைக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், அந்த அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுப்பதோடு, இதுகுறித்த நிலை அறிக்கையை மறுநாளே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
மீண்டும் அடம்பிடித்த கர்நாடகா..! ஒரே போடாக போட்ட ஒழுங்காற்று குழு..! தமிழகத்திற்கு வருகிறது காவிரி நீர்..!!
