வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 12ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்பும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது கடந்த 25ம் தேதி வரை தொடர்ந்து 13 நாட்களாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதையடுத்து இரு தரப்பும் கடந்த 26ம் தேதி முதல் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. இதனால் மத்திய கிழக்கில் அமைதி திரும்பியுள்ளது.
டிரம்ப் – நெதன்யாக்கு சந்திப்பு
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை இன்று சந்தித்தார். வெள்ளைமாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் சூழ்நிலை, ஈரான் போர், அடுத்தகட்ட நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியப்பின் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
