தமிழக உரிமையை மீட்குமா? மேட்டூருக்கு தண்ணீர் வருமா?

தமிழக அரசியலில் கடந்த 14 ஆண்டுகளாக இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை நேரடியாக சந்திக்க பெங்களூரு போக உள்ளார். கோர்ட், கேஸ், தீர்ப்பாயம் என்று இருந்த காவிரி விவகாரத்தில், இப்போது ஏன் இந்த நேரடிப் பேச்சுவார்த்தை? இதனால் தமிழகத்திற்கு லாபமா? நஷ்டமா? மேகதாது அணை விவகாரத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன?

முதல்வர் பயணம், கடும் எதிர்ப்பு இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை இயல்பு நிலையில் இல்லை. இதனால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. ’எங்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை, நாங்கள் எப்படி உங்களுக்கு தண்ணீர் கொடுப்போம்?’ என்று கர்நாடகா நமக்கு கையை விரித்துள்ளது. ஆனால், சட்டப்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 28 டி.எம்.சி. நிலுவை தண்ணீரையும் இதுவரை கர்நாடகா நமக்கு தரவில்லை. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே, இந்த விவகாரத்துக்கு ஒரு சுமூக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனது பெங்களூரு பயணத்துக்கு திட்டமிட்டுள்ளார். ஆனால், பெங்களூரு பயணத்திற்கு, எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.

நூற்றாண்டு கால வரலாறு…காவிரி பிரச்சனை நேற்று இன்று துவங்கியதா? இல்லை, இதற்கு பின்னாடி ஒரு நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது. * 1892 மற்றும் 1924ல் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள் தான் இதன் அடித்தளம். * இதன்படி, தமிழ்நாட்டின் அனுமதியின்றி கர்நாடகா அரசு, காவிரிக்கு குறுக்கே புதியதாக எந்த அணையும் கட்டக்கூடாது. * தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மூலமாக 1983ல், Supreme Courtல் வழக்கு தொடரப்பட்டது.* இதன் மூலமாக ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்கப்பட்டது.

தொடரும் பேச்சுவார்த்தைகள் * 1968 முதல் 1990 வரை மத்திய அரசு முன்னிலையில இரு மாநிலங்களும் 26 தடவைகளுக்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்தும் எந்த பலனும் இல்லை. * 2007ல் நடுவர் மன்றம் தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. * ஆனால், 2018ல் உச்சநீதிமன்றம் அதை 177.25 டி.எம்.சி. ஆக குறைத்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை (CWMA) அமைத்தது.

மேகதாது அணை விவகாரம் அடுத்து, தற்போது உள்ள மிகப் பெரிய பிரச்சனையே இந்த ‘மேகதாது அணை’ தான். ராமநகரா மாவட்டத்தில், தமிழக எல்லையில் இருந்து வெறும் 15 கி.மீ. தூரத்தில், ரூ.9,000 கோடி பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்ட அணையை கட்ட கர்நாடகா அவசரம் காட்டுகிறது. இதுகுறித்து, கர்நாடகா சொல்வது என்னவென்றால், ‘பெங்களூரு நகருக்கு குடிக்க தண்ணீர் வேண்டும். 400 மெகாவாட் கரண்ட் தயாரிக்க வேண்டும். இதனால் 80% லாபம் தமிழ்நாட்டுக்குத் தான்,’ எனக் கூறுகின்றனர்.

அணை கட்டிவிட்டால்…ஆனால், உண்மை என்னவென்றால், மேகதாது அணை கட்டிவிட்டால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது. இதனால் தான், சமீபத்தில், ஜூன் 19 அன்று முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘எங்களது உரிமையை விட்டுத்தர மாட்டோம்,’ என்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

முன்னாள் முதல்வர்களும்…இப்போது, எதிர்க்கட்சி மற்றும் விவசாய சங்கத்தினருடைய கேள்வி என்னவென்றால்? ‘நீதிமன்ற வழக்கு இருக்கும்போது ஏன் கர்நாடகா உடன் முதல்வர் பேசவேண்டும்?’என்பது தான். ஆனால், இந்த மாதிரி பேச்சுவார்த்தைகளை முன்னாள் முதல்வர்கள் நடத்தி உள்ளனர்.

* 1980ல் தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டபோது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தன்னோட தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து அவசர தேவைக்காக தண்ணீர் வாங்கினார்.

* 1996ல் முதல்வராக இருந்த கருணாநிதி, கர்நாடக முதல்வர் ஜே.எச்.பட்டேலுடன் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

* 2012ல் ஜெயலலிதா, டெல்லியில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேசினார். அதற்கு பிறகு, கடந்த 14 ஆண்டுகளாக எந்தவொரு நேரடி அரசியல் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.

காவிரி உரிமை மீட்டெடுக்குமா?இப்போது, 14 ஆண்டுகள் கழித்து முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை முயற்சியை எடுத்துள்ளார். ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று பெங்களூருவில் நடக்கப் போகும் இரு மாநில முதல்வர்களின் சந்திப்பு, தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்டெடுக்குமா? அல்லது எதிர்க்கட்சிகள் சொல்வது மாதிரி சட்டப்பூர்வ உரிமைகளை பலவீனப்படுத்துமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source link