பெண்களுக்கு மொட்டையடித்து, விபூதியடிக்கும் சிறுத்தை பட காமெடி காட்சி சேலத்தில் நிஜத்திலேயே அரங்கேறி உள்ளது பலரையும் அதிர்ச்சிடைய வைத்துள்ளது. 3 அப்பாவி பெண்கள் மொட்டையடித்துவிட்டு ஒருபுறம் திரு திருவென முழித்துக் கொண்டிருக்க, நல்லவேளை 20 தலைகள் தப்பியது என்ற சிறு ஆறுதலில் மறுபுறம் கிராமத்து பெண்கள் அப்பாடா என அமைதியாக அமர்ந்திருக்க, ஒரே ஒரு செல்போன் அழைப்பை நம்பி பெண்கள் மொட்டையடித்தது ஏன்? அதன் பின்னணி என்ன?
வழுவழுவென மொட்டை…பணம் கொட்டும் எனக்கூறி ஒருவர் வழுவழுவென மொட்டையடித்து தங்களுக்கு பட்டை போட்டுவிட்டதாக, சிறுத்தை படத்தில் எப்படி பெண்கள் நீதிகேட்டு புலம்பி கொண்டிருக்கிறார்களோ, அதேபோன்றுதான் மாம்பழ நகரத்திலும் பெண்கள் மொட்டை தலைகளுடன் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புதுகொத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரவு 8 மணியளவில் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. தான், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக எதிர்முனையில் கூறிய நபர், அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் கூறி உள்ளார். அத்தனைபேரின் பெயர்களையும் சரியாக சொன்னதால் உண்மையிலேயே தாசில்தார் தான் பேசுவதாக அந்த பெண்ணும் நம்ப, கொரோனா போன்று புதுவித நோய் படையெடுப்பதாகவும், அந்த நோய் தலைமுடி வழியாக தான் பரவுவதாகவும் கூறிய அந்த மர்மநபர், இதற்கு மொட்டை அடிப்பது ஒன்றுதான் தீர்வு, வெளிநாடுகளிலும்கூட அதனைதான் பின்பற்றுகிறார்கள் எனக்கூறி உள்ளார்.

மொட்டை அடித்தால்…மேலும், மொட்டையடித்த கையோடு அரசு சார்பில் வழங்கப்படும் ஊக்கத் கையையும் பெற்றுகொள்ளலாம் என கொக்கிபோட்ட அந்த நபர், ஆண்கள் தலைக்கு ரூ.6 ஆயிரம், பெண்கள் தலைக்கு ரூ.15 ஆயிரம் எனவும் தெரிவித்துள்ளார். அதிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் தலை என்றால் 45 ஆயிரம் மற்றும் லேப்டாப் வழங்கப்படும் எனவும் கூறிய அவர், உங்கள் ஊருக்கு 18 டோக்கன்கள் மட்டும்தான் வந்துள்ளது, முந்திக்கொள்பவர்களுக்கே ஜாக்பாட், கூடவே நோயில் இருந்து தப்பிக்கலாம் எனவும் கூறியதாக தெரிகிறது. இவை அனைத்தும் உண்மை என நம்ப வைப்பதற்காக, மொட்டையடித்த சிலரது போட்டோக்கள் மற்றும் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் உள்ள போட்டோக்களையும் அந்த நபர் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.

20 தலைகள் தப்பின…மதியம் 2 மணிக்கு நாங்கள் பணத்துடன் வருவோம், அதற்கு முன்பே மொட்டையடித்து தயாராக இருக்க வேண்டும் என கண்டிஷனும் போட்டுள்ளார். எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும் கிராம மக்களுக்கு தாசில்தார் தான் பெரிய அதிகாரியே. அதனால், 20 பெண்கள் மொட்டையடிக்க தயாராகினர். அதிலும், 3 மூதாட்டிகள் மொட்டையடித்துவிட்டு பணத்தை வாங்க காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், பணத்துடன் வருவதாக கூறிய நபர், மணிக்கணக்கில் காத்திருந்தும் வரவே இல்லை. அதுமட்டுமல்லாது அந்த செல்போன் எண்ணும் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டது. அப்போது தான், அந்த மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையே உணர்ந்தனர். நல்லவேளை மொட்டை மூன்றோடு நின்றது. 20 தலைகள் தப்பியது.

அதிர்ச்சி தரும் கேள்விகள் சிறுத்தை படத்திலாவது நடிகர் கார்த்தி, பெண்களின் வீடுகளுக்கு நேராகவே சென்று பணம் கொட்டப்போகிறது எனக்கூறி ஏமாற்றினார். ஆனால், சேலத்தில் நேரில்கூட வராமல் ஒரே ஒரு செல்போன் அழைப்பிலேயே மர்மநபர் எவ்வளவு பெரிய வேலையை பார்த்துவிட்டார் என்பதுதான் அதிர்ச்சியே. இந்த சம்பவம் ஒருபுறம் சிரிப்பை வரவழைத்தாலும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி இன்று மொட்டையடிக்க வைத்த நபர், நாளை இன்னும் என்னென்ன மோசடிகளை எல்லாம் அரங்கேற்றமாட்டார் என்ற கேள்வி எழுகிறது.

காவல்துறை அறிவுறுத்தல்அதனால், அந்த மர்நபர் யார்? எதற்காக படிக்காத பாமர மக்களை மொட்டையடிக்க வைத்து விநோத சேட்டையில் ஈடுபட்டார்? அப்படி மொட்டையடிக்க வைப்பதால் அவருக்கு என்ன லாபம்? அரசு ஊக்கத்தொகை வழங்கும் என மக்களை நம்ப வைத்தது ஏன்? தாசில்தாரை கோர்த்துவிடும் நோக்கத்தில் இதனை செய்தாரா? அல்லது சிறுத்தை பட காட்சியை நிஜத்தில் அரங்கேற்றி பார்க்கலாம் என்பதற்காக செய்தாரா? பெண்களை பழிவாங்கும் நோக்கில் மொட்டையடிக்க வைத்தாரா?

இந்த வேலையில் ஈடுபட்டது உள்ளூர் நபரா? அல்லது வெளியூர் நபரா? என பல்வேறுகோணங்களில் ஆத்தூர் நகர போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். மொத்தத்தில் மர்மநபர் பிடிபட்டால்தான் இத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். அதேநேரம், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமே தவிர இதுபோன்று தலையை கொடுத்து முடியை இழக்கக்கூடாது எனவும் கண்ணால் பார்க்காமல் எதையுமே நம்பக்கூடாது எனவும் காவல்துறை தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு நிதியுதவி தருவதாகக் கூறி பெண்களை ஏமாற்றி மொட்டை அடிக்க வைத்த அரியலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் பெண்கள் மொட்டை அடிப்பதை பார்த்து ரசிக்கும் விசித்திர மனநோய் கொண்டவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி செய்தல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
