திமுக எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் என அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் திமுகவினர் மத்தியில் பரபரப்பினை கிளப்பியது. இதனிடையில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயனை, கடந்த சில தினங்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இந்நிலையில் திமுகவை சார்ந்தவர்கள் மீது எடுக்கப்படும் தொடர்ச்சியான நடவடிக்கை குறித்து திமுகவை சார்ந்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
திமுகவை சார்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மு.க. ஸ்டாலினும், உதயநிதியும் அவர்களுக்கு அரணாக இருந்து வருவதாக அப்பாவு தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் பெற்று கொண்டிருக்கிறது. அதில் எம்எல்ஏ கடத்தல், குதிரை பேரம், சோஃபா அன்பளிப்பு மூலமாக குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த விஜய், காவல்துறையை ஏவி திமுகவினரை குறி வைத்து பொய் வழக்குகள் பதிவு செய்து தொடர்ச்சியான மிரட்டலில் ஈடுபட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டினை அப்பாவு முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் கைது . செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு. GenZ திமுக அமைப்பை சார்ந்த இளைஞர்கள் கைது என தவெக அரசுடைய வெறியாட்டம் தொடரும் போதெல்லாம் மு.க. ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். அதோடு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து கட்சிக்காரர்களை காப்பாற்றி விஜயை ஓட ஓட விரட்டி வருகிறார்கள்.
பாளையங்கோட்டை சிறைக்கு வந்து எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறியயது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பினையும், உற்சாகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நடிகர் விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள், தவெக தொண்டர்கள் அவருடைய கண் எதிரே செத்து மடிந்தனர். அப்போதும் கண்டு கொள்ளாமல் தனி விமானம் மூலமாக சென்னை திரும்பி பனையூர் பங்களாவில் பதுங்கி கொண்டார்.
அதை போல் திமுக எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் சிஎம் சார் என கடுமையாக தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுக நிர்வாகிகளுக்கு ஒரு சின்ன இன்னல் ஏற்பட்டாலும் உடனடியாக கலைஞர், மு.க. ஸ்டாலின் களத்தில் இறங்குவார்கள். அதே வழியில் உதயநிதியும் துணிச்சலோடு களம் இறங்கி குரல் கொடுக்கிறார்.
அதோடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தவெக ஆட்சியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழக உரிமைகளை பாதுகாக்க தவறியது குறித்து சட்டமன்றத்தில் எவ்வாறு விவாதிக்க வேண்டுமென திமுக எம்எல்ஏக்களை தயார் செய்து வருகிறார். இது இரண்டு தவெக அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் அப்பாவு.
மேலும் ஒன்றிய, மாநில அரசுகளின் அடக்குமுறைகளை கண்டு அஞ்சாமல், அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் பெருமையை காப்பாற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரின் துணிவை பார்த்தாவது செயல்படுவீர்களா சிஎம் சார்? இவ்வாறு தன்னுடைய பதிவில் அப்பாவு கேள்வியை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
