பிரபல நிறுவனத்தின் ஆண்டு விழாவில், ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு கோஷமிட்டதாக, வீடியோ பரவி வருகிறது. என்ன நடந்தது?50ஆவது ஆண்டு பொன்விழாவில்…எச்.சி.எல். நிறுவனத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தின் போது, HCL Technologies தலைமை நிர்வாக அதிகாரி விஜயகுமார் மேடைக்கு வந்த உடன், அங்கு திரண்டிருந்த ஊழியர்கள், “எங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும்,” என்பதை கேட்கும்விதமாக, ‘We Want Hike’ என்று, கோஷமிட்டது தான் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இசை நிகழ்ச்சியில்…சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் வழங்கிய இசை நிகழ்ச்சி உட்பட பல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே HCL Tech CEO விஜயகுமார், பணியாளர்களிடையே உரையாற்ற மேடைக்கு வந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஊழியர்களின் ஒரு பகுதியினர் திடீரென ஒரே குரலில் “We Want Hike” என்று கோஷமிடத் தொடங்கினர். இந்த எதிர்பாராத கோஷத்தால், மேடையில் தர்மசங்கடமான சூழல் உருவான போதிலும், CEO விஜயகுமார் பதற்றம் அடையாமல் அமைதி காத்தார். அவர் ஊழியர்களை நோக்கி கை காட்டி, தனது வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்தார்.
என்ன தான் நடந்தது?இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவியதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்தவர்கள் “We Want Hike” என்று கோஷமிடவில்லை, மாறாக அனிருத் நிகழ்ச்சி என்பதால் “We Want Dance” அதாவது, எங்களுக்கு நடனம் வேண்டும் என்று தான் கோஷமிட்டனர் என்ற விளக்கமும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சம்பள உயர்வு இல்லையா?கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய ஐடி துறையில் உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக, ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் புதிய வேலைவாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் ஐடி ஊழியர்களிடையே நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், HCL Tech நிறுவன CEO விஜயகுமார் கடந்த 2026ல் சுமாராக 174.86 கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிக அதிக ஊதியம் பெறும் ஐடி சிஇஓ-வாக உள்ளார்.
பணியாளர்களின் ஏக்கம்…இந்நிலையில், தங்களுக்கு உரிய சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்ற பணியாளர்களின் ஆதங்கம் இந்த சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளதாக சமூகவலை தளங்களில் கருத்து பகிரப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து HCL நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் தரப்படவில்லை.
