புதுடெல்லி,
மத்திய கிழக்கில் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்து உள்ளது. இதனால் வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கச்சா எண்ணெய் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் எரிவாயு ஏற்றி வந்த கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. இதனையடுத்து 4 கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தன.
இந்தநிலையில், எரிவாயு நிரப்பட்ட மேலும் 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு புறப்பட தயாராகி வருகின்றன. பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகிய திரவ பெட்ரோலிய எரிவாயும் நிரப்பப்பட்ட 2 இந்திய கப்பல்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜா அருகே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்கள் இந்தியாவுக்கு புறப்படுவதற்கான சிக்னல்கள் வந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவு மையம் தெரிவித்து உள்ளது. அக்கப்பல்கள் இன்று புறப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில், மத்திய கிழக்கு போரால் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவு 30 சதவீதம் ஆககுறைக்கப்பட்ட நிலையில், மார்ச் 23 முதல் 50 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஒதுக்கீடுகளை ஹோட்டல்கள், அரசு சமையல் கூடங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
