தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டமன்றத் தேர்தலை அமைதியாகவும் முறைகேடுகள் இல்லாமல் நடத்துவதற்காக தென் மாவட்டங்களில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. விஜேந்திர பிதாரி தலைமையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உள்ளிட்டோர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை கண்காணித்தனர்.
தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் இணைந்து பணியாற்றி வருவதால், சந்தேகத்திற்கிடமான பணம், பொருட்கள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடையின்றி கண்காணிக்கப்படுகின்றன.
நன்னடத்தை பத்திரம்
இந்த நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி. விஜேந்திர பிதாரி, தென் மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளவர்களை கைது செய்வது, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களிடம் நன்னடத்தை பத்திரம் பெறுவது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுவரை நெல்லை மாவட்டத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள்
மேலும், பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய நபர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தேவையான இடங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாமல் தடுக்க காவல்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி பகுதியில் அண்மையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பழைய குற்றப் பதிவுகள் உள்ள நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டனை பெற்றவர்.
தூத்துக்குடி மாணவி வழக்கு
அவர் மீது இருந்த பழைய வழக்குகள் தொடர்பாக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தது. சம்பவம் நடந்த நாட்களிலும் அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் தொடக்கத்தில் எந்த விதமான உறுதியான தடயங்களும் இல்லாத நிலையில், அறிவியல் ரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, டி.என்.ஏ. பரிசோதனை முடிவின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும், தனி ஒருவரின் செயலாகவே இது நடந்து உள்ளது எனவும் விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக கூறினார். மேலும், தேர்தல் காலத்தில் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் அவசியம் என்றும், அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஐஜி எச்சரிக்கை
நெல்லை மாவட்டத்தில் சாதி அடிப்படையிலான மோதல்கள் ஏற்படாமல் தடுக்கவும் காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், சிறிய அளவிலான பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
மாதம்பட்டி வழக்கில் Police VIP Treatment கொடுக்கிறார்கள்!
தேர்தல் காலத்தில் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனைகளையும் சகித்துக் கொள்ள மாட்டோம், குறிப்பாக சாதி ரீதியிலான மோதல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
