தூண்கள் இல்லாத பாதையில் ரயில் போக்குவரத்தின்போது, ஒரு சிறிய அளவிலான நெகிழ்வு ஏற்படலாம் என்பதால் அதன் உறுதி மற்றும் நெகிழ்வுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்மட்ட பாலம்
இந்த வழித்தடத்தில் நசரத்பேட்டை பகுதியில், இரண்டு தூண்களுக்கு இடையில் சுமார் 61.2 மீட்டர் நீளத்தில் வளைந்த அமைப்பில் ஒரு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. இரும்பும் கான்கிரீட்டும் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், தூண்கள் இல்லாத இடைவெளியில் நிலைத்தன்மையை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
6 மாத கால ஒப்பந்தம்
இருப்பினும், இத்தகைய நீளமான வளைவு அமைப்புகளில் ரயில் இயக்கத்தின் போது இயல்பாக சிறிய அளவில் நெகிழ்வு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், அதனை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகிறது. இதற்காக சிஎஸ்ஐஆர் கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் 6 மாத கால ஒப்பந்தம் செய்து, பாலத்தின் செயல்திறனை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது.
பாலத்தின் பாதுகாப்பு நிலை
அதன் ஒரு பகுதியாக, பாலத்தின் முக்கிய பகுதிகளில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள் ரயில் இயக்கத்தின் போது ஏற்படும் நெகிழ்வு, அதிர்வு போன்ற மாற்றங்களை துல்லியமாக பதிவு செய்து தரவுகளை சேகரிக்கும். இந்த தரவுகளை சிஎஸ்ஐஆர் கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையமும், சென்னை மெட்ரோ நிர்வாகமும் இணைந்து ஆய்வு செய்து, பாலத்தின் பாதுகாப்பு நிலையை தொடர்ந்து மதிப்பீடு செய்யும்.
நெகிழ்வு இருக்கலாம் என மதிப்பீடு
ஆரம்ப கட்ட சோதனை ஓட்டங்களில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த பாலத்தில் ரயில் செல்லும் போது சுமார் 10 மில்லிமீட்டர் அளவிற்கு நெகிழ்வு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக இது பாதுகாப்பான அளவாக கருதப்படுகின்றது. இருப்பினும், அதிகபட்சமாக 25 மில்லிமீட்டர் வரை நெகிழ்வு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டு ள்ளது.
சென்சார் அமைப்பு
எதிர்காலத்தில் இந்த நெகிழ்வு அளவு அதிகரித்தால் அல்லது கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை உடனடியாக கண்டறிந்து சரிசெய்ய இந்த சென்சார் அமைப்பு உதவும். குறிப்பாக பாலத்தில் சிறிய விரிசல்கள் அல்லது கட்டமைப்பு குறைபாடுகள் ஏற்பட்டாலும், அவை இந்த கருவிகளின் மூலம் முன்கூட்டியே கண்டறியப்படலாம்.
கண்காணிப்பு தொழில்நுட்பங்கள்
இந்த முயற்சி, மெட்ரோ திட்டங்களில் பாதுகாப்பு தரத்தை மேலும் உயர்த்தும் முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. மேலும், இத்தகைய கண்காணிப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவில் தானே உருவாக்கும் நோக்கத்துடன் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கிடைப்பது எப்படி? முழு தகவல் இதோ…
தொழில்நுட்ப முன்னேற்றம்
இதற்கு முன்பும் சென்னை நகரில் பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில், அதன் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு பின்னரே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தற்போதைய இந்த நடவடிக்கையும் மெட்ரோ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றமாக கருதப்படுகிறது.
