சென்னை,
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகத்துடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”நாங்கள் 6 தொகுதிகள் கேட்டோம். ”புதிய கட்சிகள் வந்துள்ளன. மற்ற கட்சிகள் போன்று மார்க்சிஸ்டும் தொகுதிகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.. எனவே 5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் சிரமம் இருப்பதாக முதல்வர் கூறினார்.
முதல்வர் கூறி இருப்பதால், அதனை பரிசீலிக்க வேண்டியது எங்கள் கடமை. முதல்வரின் கோரிக்கை தொடர்பாக எங்கள் நிர்வாகக் குழு கூடி முடிவு எடுக்கும். அனைத்தும் வெளிப்படையாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில் ரகசியம் ஏதுமில்லை. முதலில் எத்தனை தொகுதிகள் என்பது முடிவுசெய்யப்படும். அதன் பின்னர் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்த பட்டியல் வெளியிடப்படும்.
சென்னையிலும் போட்டியிட ஒரு தொகுதியை திமுகவிடம் கேட்டுள்ளோம். கொள்கைப் பூர்வமாக தீர்மானத்தின் அடிப்படையில் திமுக அணியில் நாங்கள் நீடிக்கிறோம். எத்தனை தொகுதிகள் கொடுக்கிறார்கள்? என்பதை பொறுத்து இந்த அணியில் நீடிக்கலாமா வேண்டாமா? என்று முடிவு செய்யும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிடையாது. ”
இவ்வாறு அவர் கூறினார்.
