புதுச்சேரி
புதுச்சேரி அரசின் பதவிக்காலம் ஜூன் 15-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற என்.ஆர். காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய 2 தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
ஆனால், தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், புதுச்சேரி அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நடப்பாண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.
