10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத் தேர்வு எழுதி வருகிறார்கள். பிளஸ் 2 தேர்வு 26-ந் தேதியுடன் முடிகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முடிவடைகிறது. சுமார் 17 லட்சம் மாணவ மாணவிகள் பொது தேர்வினை எழுதி முடிக்கிறார்கள்.
இந்த தேர்வுகள் முடிந்த பின்னால், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி களில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ந் தேதி ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி 16-ந் தேதி முடிவடைய உள்ளது.
அதேபோல 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி தேர்வுகள் முடிக்க திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 17-ந் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி விடுமுறை விடப்படுகிறது.பள்ளிக்கூடங்கள், வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவதால் அதற்கான பணிகளை செய்ய வேண்டியுள்ளது. தேர்தல் பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கோடை விடுமுறை மாணவர்களுக்கு 48 நாட்கள் கிடைக்க உள்ளது குறிப்பிடதக்கது.

