பாஜக 27, பாமக 18, அமமுக 11- அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு- ஈபிஎஸ் கையெழுத்து! – bjp pmk ammk final seat sharing count with aiadmk 2026 assembly election

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக இடம்பெற்றுள்ள முக்கியமான கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக கடந்த முறையை காட்டிலும் 7 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

AIADMK Alliance Seat Sharing(புகைப்படங்கள்Samayam Tamil)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சற்றுமுன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் வருகை புரிந்தனர். இதையடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து கையெழுத்திட்டனர். முக்கியமான கட்சிகளாக பார்க்கப்படும் பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றுக்கு முதல்கட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பாஜகவின் வாக்கு வங்கி உயர்வு

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை கூடுதலாக 7 தொகுதிகளை பெற்றிருக்கிறது. இதற்கு 2024 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அப்போது, அண்ணாமலை தலைமையில் பாஜக 11 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. எனவே கட்சி வளர்ந்திருக்கிறது. வாக்கு வங்கியாக மட்டுமின்றி, கிராமங்கள் தோறும் கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் கூடுதல் சீட் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பாஜக டார்கெட் செய்யும் 20 தொகுதிகள் – முழு பட்டியல்!

பிளவுபட்ட பாமக – ஈபிஎஸ் ஒதுக்கிய 18 சீட்

மேலும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்28 தொகுதிகளை பெற்ற நிலையில், அதைவிட ஒன்றிரண்டு தொகுதிகளை அதிகமாக பெற வேண்டும் என பாஜக தரப்பு முனைப்பு காட்டியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தையால் 27 என்ற எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளது. பாமக கடந்த தேர்தலில் ஒன்றுபட்ட நிலையில் போட்டியிட்டது. அப்போது 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5ல் வென்றனர். இம்முறை ராமதாஸ், அன்புமணி என இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். இது வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு 5 தொகுதிகளை இம்முறை குறைத்து கொண்டனர்.

டிடிவி தினகரனின் தென் மாவட்ட செல்வாக்கு

அமமுகவை பொறுத்தவரை கடந்த தேர்தலில் தனி அணியாக களம் கண்டது. தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் உடன் கூட்டணி அமைத்திருந்தது. அப்பொது 165 தொகுதிகளில் போட்டியிட்டு அமமுக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 2.35 சதவீத வாக்குகளை பெற்றது. இம்முறை எடப்பாடி பழனிசாமி உடனான அரசியல் எதிர் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் கைகோர்த்துள்ளார். இவர்களின் வலிமை மற்றும் தென் மாவட்டங்களில் இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 11 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

என்.டி.ஏ கூட்டணி – இன்று இரவே முழுமை பெறும்

தற்போது சீட் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்ட பாஜக (தாமரை), பாமக (மாம்பழம்), அமமுக (குக்கர்) எனத் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். மற்ற கட்சிகள் இதுதொடர்பாக அதிமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கியமான ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அதாவது, இன்று இரவிற்குள் எஞ்சியுள்ள கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.
அப்படி பார்த்தால் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் கட்சி, இந்திய குடியரசு கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக், பசும்பொன் தேசிய கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடும் சீட் எண்ணிக்கை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.