ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்..பொருளாதார சிக்கலில் உலக நாடுகள்! – trump warns iran of severe consequences if strait of hormuz is not reopened

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை கட்டுப்படுத்தும் முயற்சி என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 28 -ஆம் தேதி அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் பள்ளிக்குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்பட்டனர்.மேலும் அமெரிக்காவின் பாதுகாப்பை முன்னுத்தி நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவரான அலி கமேனி தனது குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.

கிட்டத்தட்ட 2000 இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதில் வினையாற்ற தொடங்கியது ஈரான். அமெரிக்க தளவாடங்கள் இருக்கக்கூடிய வளைகுடா நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது ஈரான். இதனால் தற்போது வரை உலகம் முழுக்க போர்பதற்றம் நிலவி வருவதோடு மேற்காசிய நாடுகள் முழுவதையும் போர் மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன.

இந்தப் போரால் ஹார்மோஸ் நீர்முனையை முழுமையாக மூடியிருக்கிறது ஈரான். மேலும் உலகின் மிக முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அரம்கோவையும் தாக்கி அழித்திருக்கிறது.
ஈரான் உடனான போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் உலகளாவிய கச்சா எண்ணெயில் 20 சதவீதம் ஹார்மோஸ் நீரிணையை கடந்துதான் வரக்கூடிய சூழலில், ஒரு சதவீத கச்சா எண்ணெய் இழப்பும் கிட்டத்தட்ட நான்கு சதவீத விலை உயர்வை உண்டாகும் அபாயம் இருக்கிறது, இதனால் உலகம் முழுக்க கடுமையான பொருளாதார சரிவு ஏற்படும்.

பகிரங்கமாக மிரட்டிய டிரம்ப்

இந்த சூழலில் தான் ஹார்மோஸ் நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்களை, இணைய தளங்களை தாக்கி அழிப்போம் என ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார். இதற்கு பதில் வினையாக “அமெரிக்கா ஒருவேளை எங்களின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடி மிக வலிமையாக இருக்கும் என ஈரானும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

குழப்பமான பதிவுகளை பகிரும் அமெரிக்க அதிபர்

இந்த சூழலில் தான் அமெரிக்கா அதிபர் டிரம்ப் போர் குறித்து மிகவும் குழப்பமான முன்னுக்கு பின் முரணான தகவல்களை தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். ஏற்கனவே ஈரான் மீதான தாக்குதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கு முற்றிலும் மாற்றாக 2,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் அடங்கிய போர்க்கப்பலை ஈரானுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.அதுமட்டுமின்றி ஹார்மோஸ் நீர்முனையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என எச்சரிக்கை வேறு விடுத்து இருக்கிறார்.

பாகிஸ்தானை உதவிக்கு அழைத்த சவுதி

இதற்கிடையில் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையங்களை ஈரான் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் என சவுதி அரேபியா அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது.

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான மேற்காசிய போர் கொஞ்சம் கொஞ்சம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகம் முழுக்க போர் பதற்றம் அதிகரிப்பதோடு நீண்ட கால் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். இது அனைத்து நாடுகளின் விலைவாசி ஏற்றத்தை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Source link