புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி.. காரணத்துடன் திருமாவளவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – 2026 puducherry assembly election thirumavalavan decide vck to contest alone

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, விசிக இடையில் இன்று தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் புதுச்சேரி மாநிலத்தில் நடக்கவுள்ள தேர்தலில் விசிக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசிக திருமாவளவன்
சட்டப்பேரவை தேர்தல் ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள நிலையில், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 16 ஆம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. இதனிடையில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாவதில், தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வந்தது. அதோடு ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே தனித்தனியாக வேட்புமனுத் தாக்கல் செய்தன.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி

இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் விசிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக, விசிக இடையில் இன்னமும் தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகமல் உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டு வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையில் புதுச்சேரியின் மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக விசிக அறிவித்துள்ளது.
விசிக எம்பி திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பு
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த பல ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அங்கம் வகுத்து வருகிறது. தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்களை கூட்டணியுடன் சந்தித்து வருகிறோம். திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 2001 ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம்.
மூன்று தொகுதிகள்
இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே ஒதுக்கிய நிலையில், கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்பதற்காக அதனை ஏற்றுக் கொண்டோம். ஆனாலும் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்காத போதிலும், சுமார் ஆறாயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்றோம். தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மூன்று தொகுதிகளை விசிக தரப்பில் இருந்து கேட்டு இருந்தோம்.
திமுக தரப்பிலிருந்து ஒரு இடம்
ஆனால் வேட்புமனுத் தாக்கல் முடிந்து நீண்ட இழுபறிக்கு பின்பாகவே திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடும் காரணத்தால், மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதற்கு முன்வரவில்லை. திமுக தரப்பில் இருந்து விசிகவுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதற்கு முன்வந்துள்ளது. ஆனாலும் அது எந்த தொகுதி என்பது பற்றி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
நிர்வாகிகள் மன உளைச்சல்
காங்கிரஸ் கட்சி விசிக, சிபிஐ வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள அனைத்து தொகுதிகளிலும், வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. இதுவரை விசிகவுக்கு எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கட்சியின் நிர்வாகிகள் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் விசிக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள இடங்களில் தனித்து போட்டியிட உள்ளோம் என அறிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
கூட்டணிக்கு ஆதரவு

அதன்படி விடுதலை சிறுத்தை கட்சி ஊசுடு, உழவர்கரை மற்றும் நெட்டப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளது. அதே நேரம் மற்ற இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிட உள்ளவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கும் விசிக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.