திமுக கூட்டணியில் எஞ்சியிருக்கும் பெரிய கட்சிகளில் விசிக, தேமுதிக ஆகியவற்றுக்கான தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து எஞ்சியுள்ள கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகள் உடன் உடன்படிக்கை விரைந்து முடிவு செய்யப்படும் என்கின்றனர்.
விசிகவிற்கு எத்தனை சீட்?
தங்களது 10 அம்ச கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால் திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. மேற்குறிப்பிட்ட கட்சிகளில் சற்று பெரிய கட்சிகளாக பார்க்கப்படுபவை விசிக மற்றும் தேமுதிக. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உடன் பேச்சுவார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வெற்றி பெற்றனர். ஆனால் இம்முறை இரட்டை இலக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் திருமாவளவன் இருக்கிறார்.
திமுகவால் விசிக பெயர் கெட்டுப்போச்சு_- sangatamizhan vck
திருமாவளவன் முன்வைக்கும் கோரிக்கை
இதுதொடர்பாக கட்சியில் உயர்நிலை குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் திமுக தலைமையை பொறுத்தவரையில் உதயசூரியனை அதிக தொகுதிகளில் நிறுத்த காய் நகர்த்தி வருகிறது. ஏனெனில் கூட்டணி கட்சிகளின் சின்னத்தை காட்டிலும் 50 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் களத்தில் இருக்கும் திராவிட கட்சிகளின் சின்னத்திற்கு செல்வாக்கு அதிகம். அதுமட்டுமின்றி நடிகர் விஜய்யின் தவெக போன்ற புதிய சக்திகளால் வாக்கு வங்கி பிளவை சமாளித்து ஆட்சியை தக்க வைக்க வேண்டியுள்ளது.
6 தனி, 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்க திட்டம்
மேலும் 1977க்கு பின்னர் திமுக தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைத்தது இல்லை என்ற வரலாற்றை திருத்தி எழுத வேண்டியுள்ளது. எனவே தான் சீட் எண்ணிக்கையை குறைத்து கொள்ளும்படி கூட்டணி கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த விஷயத்தை திருமாவளவன் புரிந்து கொண்டாலும், தங்கள் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கேற்ப பிரதிநிதித்துவமும், அதிகாரமும் பெற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் இரண்டு இலக்கத்திற்கு திமுக ஒத்துவரவில்லை. கடைசியாக 8 தொகுதிகள் என உடன்பாடு எட்டியுள்ளது. இதில் 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர்.
முரசு சின்னத்தை தக்க வைக்கும் திட்டம்
தேமுதிகவை பொறுத்தவரை 2005ல் முதல் அரசியல் களத்தில் இருந்தாலும் சமீப காலமாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. 2011ல் எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்ந்ததே மிகப்பெரிய சாதனை. அதன்பிறகு கள அரசியலிலும், தேர்தலிலும் தொடர் சரிவு தான். விஜயகாந்த் மறைவை அடுத்து, கட்சியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா இருக்கிறார். குறிப்பாக முரசு சின்னத்தை தக்க வைக்க வேண்டும். அதற்கு குறைந்தது 8 சதவீத வாக்குகள், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் ஆகியவை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
2026 தேர்தல் களத்தில் பல்வேறு கூட்டணிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரேமலதா விஜயகாந்த், ராஜ்யசபா டீலிங்கை வைத்து திமுக உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அப்போதே இரண்டு இலக்க எண்ணிக்கை என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். தேமுதிகவிற்கு 12 தொகுதிகள் என்றும், 10 தொகுதிகள் என்றும் பேசப்பட்டு வந்த நிலையில், 8 தொகுதிகள் ஒதுக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியின் வெற்றிக்காக சீட் எண்ணிக்கையில் சமரசம் செய்யவும் தயார் என்று பிரேமலதா பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. எனவே விசிக, தேமுதிக ஆகிய கட்சிகளை 8+8 என்ற தொகுதி பங்கீட்டில் மு.க.ஸ்டாலின் இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
