பீஜிங்
மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் வலைதள பதிவில், அமெரிக்காவும் ஈரானும் கடந்த 2 நாட்களாக மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. மத்திய கிழக்கில் நம்முடைய பகைமைக்கு முற்றிலுமொரு தீர்வு காணப்பட உள்ளது.
இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும். அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன்.
நடந்து வரும் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் நேற்று தெரிவித்து உள்ளார். இதில், கவனம் செலுத்திய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த சூழலில், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் இன்று பேசும்போது, ஈரானில் நீண்டகால மோதலால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. மேற்காசிய பகுதியில் பதற்றம் அதிகரிக்காத வகையில், அனைத்து தரப்பினரும் உடனடியாக பகைமையை விட்டொழித்து, அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன், மத்திய கிழக்கில் காணப்படும் மோதல் தொடர்ந்து அதிகரிக்கவும், விரிவடையவும் மட்டுமே செய்யும். இதனால், எரிசக்தி, நிதி, வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து என முக்கிய சர்வதேச துறைகள் நேரடியாக பாதிக்கப்படுவதுடன், அனைத்து நாடுகளின் பொதுநலன்களுக்கும் தீங்கு ஏற்படும் என சீனா கூறியிருந்தது. எந்தவொரு விவகாரத்திற்கும் ராணுவ படை ஒரு தீர்வாக இருக்காது என்பதே வரலாறும், உண்மையும் நமக்கு தொடர்ந்து கூறும் விசயங்களாகும். ஆயுத மோதல் புதிய வெறுப்புணர்வையே வளர்த்தெடுக்கும் என்று கூறினார்.
