உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாறி போட்டியிட போகிறாரா.. உண்மையை உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் – minister anbil mahesh said about the constituency from which udhayanidhi stalin will contest

சட்டமன்ற தேர்லுக்காக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இதனிடையில் அவர் இந்த தடவை சேப்பாக்கம் இல்லாமல் வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுக்குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் – அன்பில் மகேஷ்
சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தி வருகிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர் மனு அளித்தவர்களை, நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்து கொண்டிருக்கிறார். இதனிடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றார். இந்நிலையில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

திமுக தொகுதி பங்கீடு

சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக இரண்டு கட்சியும் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முழு வீச்சில் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தையில் சில இழுபறிகள் ஏற்பட்டது. அதையெல்லாம் சமாளித்து தற்போது கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
இதனையடுத்து திமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சம்பந்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பிரச்சாரம் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த தடவை எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த முறை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்ற உதயநிதி ஸ்டாலின், இம்முறை தொகுதி மாற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தொகுதி மாறி போட்டி
குறிப்பாக திருவாரூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக சார்பாக யார் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டாலும், அவர்களை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். தொடர்ந்து மற்றொரு பேட்டியில் அவர் பேசும்போது, திமுக தலைமை தான் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யும்.
தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அங்கு நான் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். அவருடைய இந்த பேச்சால் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அவர் போட்டி போடுவாரா அல்லது தொகுதி மாற போகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ், வரும் சட்டப்பேரவை தேர்தலில் உதயநிதி போட்டியிடவுள்ள தொகுதி குறித்து பேசியுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
இது சம்பந்தமான பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில், “அவருடைய சொந்த ஊர் என்பதால் திருவாரூர் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மட்டுமே விருப்பமனு அளித்தார் என தெரிவித்துள்ளார் அன்பில் மகேஷ். அவருடைய பதில் மூலமாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காகவே துணை முதலமைச்சர் உதயநிதி நேர்காணல் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
தீவிர பிரச்சாரம்
இதன் மூலமாக வரும் சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை போலவே சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனிடையில் வரும் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், என்டிஏ கூட்டணியையும் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.