வணிகர்கள் தங்களது தினசரி வியாபார தேவைகளுக்காக குறைந்தது ரூ.2 லட்சம் வரை பணத்தை எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தேர்தல் ஆணையம் வரும் 31 ஆம் தேதிக்குள் தெளிவான முடிவு எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உதகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43 ஆவது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு வரும் மே 5 ஆம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளது.
வணிகர்கள் ஆலோசனைக் கூட்டம்
அதற்கான முன்னோட்டமாக உதகையில் உள்ள பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் பேசும் போது, மாநிலத்தில் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் சின்ன, நடுத்தர வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக விக்கிரமராஜா குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் கடைகள் மூடப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். இதனால் உள்ளூர் வணிகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது
மேலும், தேர்தல் கால கட்டுப்பாடுகள் காரணமாக வணிகர்கள் தங்களது வியாபாரத்திற்கு தேவையான பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக வாகன சோதனைகளின் போது, உரிய ஆவணங்கள் இல்லையென கூறி பணம் பறிமுதல் செய்யப்படுவது வணிகர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
கார்களில் பயணம் செய்பவர்களிடம் மட்டுமே சோதனை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம், பேருந்து, ரயில், விமானங்களில் பயணம் செய்பவர்களிடம் இதேபோன்ற சோதனைகள் நடத்த முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடையடைப்பு போராட்டம்
இந்த சூழ்நிலையில், குறைந்தது ரூ.2 லட்சம் வரை பணத்தை வணிகர்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கான பதில் விரைவில் கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரும் 31 ஆம் தேதிக்குள் இந்த கோரிக்கைக்கு சாதகமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், முதற்கட்டமாக சென்னை நகரில் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதற்குப் பின்னரும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு, மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
கடும் நடவடிக்கை வேண்டும்
இதற்கிடையில், சமீபத்தில் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக பல உணவகங்கள் செயல்பட முடியாமல் மூடப்பட்டு உள்ளதாகவும், இதனால் உணவக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறானவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கோவை பூ மார்க்கெட்டில் நடந்தது இது தான் – முழு விவரம்!
மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். எந்த கட்சி எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கிறதோ, அந்தக் கட்சிக்கே வணிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற அவரது அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
