ஆகாஷ் மரண விவகாரம் – காவலர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்கு பாயாது! – high court madurai bench dismisses plea to file sc/st atrocity case against police in aakash death case

காவல் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் ஆகாஷ் மரண வழக்கில் இன்னமும் காவல் துறையினர் கைது செய்யப்படாததால் 18 நாட்களாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Aakash custodial death(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தில் காவல் விசாரணை மரணங்கள் அதிகரித்திருக்கின்றன. அதற்கு உதாரணமாக பல மரணங்களை சொல்லலாம். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடங்கி சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை சம்பவம், சமீபத்தில் நடந்த மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு என பல்வேறு காவல் விசாரணை மரணங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.

உடலை வாங்காமல் போராட்டம்

சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் இரண்டு நபர்கள் அரிவாளால் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைதான ஆகாஷ் என்ற இளைஞர் காவல் நிலைய விசாரணையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மகன் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆகாஷின் மரணத்திற்கு காவல்துறைதான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தனர். விசாரணைக்கு கூட்டிச்செல்லும் முன்பே “உன் மகன் கையில் கிடைத்தால் கொன்று விடுவேன்” என மிரட்டியதாக ஆகாஷன் தாயார் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் ஆகாஷ் “என் கால்களை கல்லால் அடித்து உடைத்ததோடு கடுமையாக தாக்கினர் என உயிரிழந்த ஆகாஷ் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. அதில் நடுவர் நீதிமன்றம் அளித்த அறிக்கையில் ஆகாஷை தாக்கியது காவல்துறையினர்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்று வரை உறவினர்கள் ஆகாஷ் உடலை திரும்ப பெறாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு காரணம் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவலாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுதான்.

எஸ்.சி/ எஸ்டி வழக்கு பதிவு செய்ய முடியாது

மதுரை மாநகரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் ஆகாஷ் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் மற்றும் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிட்டு பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் “தனி நீதிபதி இந்த வழக்கை முறையாக விசாரித்து வருவதாகவும், அரசே தாமாக முன்வந்து இந்த வழக்கினை சிபிசிஐடி -க்கு மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணைகளின்போது வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டும் உடலை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் “இதுவரை காவல் துறையினர் கைது செய்யப்படவில்லை என்பதாலேயே குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டது”

காட்டமாக விமர்சித்த நீதிபதிகள்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நீதிமன்றத்தை தனிப்பட்ட விருப்பத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்து இறந்தவரின் உடலை அங்கேயே அழுகிவிட வேண்டும் என விரும்புவீர்களா? என காட்டமாக கேள்வி எழுப்பினர். மேலும் உடலை பெறாமல் இருப்பது ஏன் எனவும் உடலைப் பெற்று முறையான இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் இறந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்துவது தற்போது பேஷனாக மாறியிருப்பதாக கடஉமையாக் விமர்சித்த நீதிபதிகள் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட வேண்டியது அடிப்படை உரிமை எனவும் குடும்பத்தினர் அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும்தெரிவித்தனர்.

மேலும் இந்த மனு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டது எனவும் காட்டமாக விமர்சித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கின்றனர். ஆனால் சம்பத்தப்பட்ட காவலர்களை கைது செய்யாமல் உடலை திரும்பப்பெற மாட்டோம் என உறவினர்கள்
18 நாட்களாக தொடர் போரட்டம் நடத்தி வருகின்றனர்.