தவெக வாசலில் காங்கிரஸ் கட்சியினர் நிற்கிறார்களா.. ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி – selvaperunthagai respond tvk aadhav arjuna comments on congress party

திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, நேற்றைய தினம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். பல காங்கிரஸார் தவெக அலுவலக வாசலில் காத்துக் கிடப்பதாகவும் பேசியிருந்தார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

செல்வப்பெருந்தகை – ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியது. அவருடைய பேச்சை ரஜினியே கண்டித்து அறிக்கை விடும் அளவுக்கு, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அமைந்தது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி குறித்து அவர் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், அவர் பேச்சுக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா பேச்சு

அதாவது சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒட்டு மொத்த மாவட்ட செயலாளர்களும், பொதுச்செயலாளர்கள் தவெக வாசல் முன்பாக நிற்கிறார்கள். ராகுல் காந்தியும் விஜய் மீது தான் அன்பு வைத்திருக்கிறார். ஆனால் இங்குள்ள வயதான சிலர் பெட்டி வாங்கிக் கொண்டு அடமானம் வைத்து விட்டார்கள். இவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் புலம்புகின்றனர்.
தவெகவில் இணையும் காங்கிரஸார்
காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கியமான நிர்வாகிகள் இன்னும் இரண்டு நாட்களில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறார்கள். கட்டாய கல்யாணம் செய்வதை போன்று தான் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது. இதே நிலைமை நடந்தால் காங்கிரஸ் காணாமல் போய்விடும். ப. சிதம்பரமும் ஒழிந்து போய் விடுவார்.
ராகுல் காந்தி குரூப்
காங்கிரஸ் கட்சியில் இரண்டு விதமான குரூப் உள்ளது. எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி சாருடைய குரூப் ஒன்று. மற்ற ஒன்று யாருடையது என்று சொல்ல வேண்டியதில்லை. கண்ணு தெரியாம, நடக்க முடியாத வயசான பழைய கூட்டம். அந்த குரூப் கலெக்ஷன், கமிஷனுக்காக திமுக திமுக என்று சொல்லிக் கொண்டே இருக்கும். இவ்வாறு திமுக, காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து பேசியிருந்தார் ஆதவ் அர்ஜுனா.
இதனையடுத்து அவருடைய பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என்று நம்பி உட்கார்ந்து ஏமாந்து போனதால், ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசுகிறார் என்று சோஷியல் மீடியாவில் காங்கிரஸை சார்ந்த தொண்டர்கள் பதிலடி கொடுத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
செல்வப்பெருந்தகை பதிலடி
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்க அந்த மாதிரி யாரும் நிற்கலை. போகவும் இல்லை. ஆதவ் அர்ஜுனா சொல்லுவாரு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வசைப்பாடுவார். யாரை வேணாலும் வசைப்படுவார். காங்கிரஸ் இயக்கத்தை அதுபோல் வசைப்பாட முடியாது. ஏனென்றால் 140 ஆண்டுக்காலம் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பேரியக்கம். இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் செல்வப்பெருந்தகை.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
தொடர்ந்து ராகுல் காந்தியின் தமிழ்நாடு வருகை குறித்து அவர் பேசுகையில், விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என தெரிவித்துள்ளார். இதனிடையில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த இடங்களில் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.