பூரி
ஒடிசாவில் போலீசாரால் அதிகம் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவராக அறியப்படுபவர் கோசா சோதி என்ற சுக்ரூ (வயது 49). இவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.55 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஏ.கே.-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, அவர் உள்பட 5 பேர் கந்தமால் போலீசில் இன்று சரண் அடைந்தனர். ஒடிசாவின் மால்கன்கிரி மாவட்டத்தில் களிமேளா பகுதியை சேர்ந்த கோயா பழங்குடியின நபரான அவர், கடந்த காலங்களில் சக மாவோயிஸ்ட்டுகளை போலீசில் சரண் அடைய விடாமல் தடுத்து வந்துள்ளார்.
சமீபத்தில் அன்வேஷ் என்ற ரேணு (வயது 31) என்ற மாவோயிஸ்ட்டு பிரிவின் மண்டல குழு உறுப்பினர் மற்றும் காலஹண்டி-கந்தமால்-பவுத்-நயாகார் மண்டல அளவிலான தளபதி பொறுப்புகளை வகித்த ரேணு 12 பேருடன் போலீசில் சரண் அடைய திட்டமிட்டு உள்ளார்.
இதனை அறிந்த சுக்ரூ அவரை மற்ற 2 மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்து தடுக்க முயன்றார். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் ரேணுவை அவர்கள் சேர்ந்து படுகொலை செய்தனர். இந்நிலையில், சுக்ரூ போலீசில் சரண் அடைந்துள்ளார்.
