பாமக போட்டியிடும் 18 தொகுதிகள்.. வெளியான முழுமையான லிஸ்ட்.. அன்புமணிக்கு காத்திருக்கும் சவால் – anbumani pmk contest 18 constituencies in the aiadmk alliance list

தேசய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவார்களுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த லிஸ்டில் விஜய் போட்டியிட போவதாக கூறப்படும் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியும் இடம்பெற்றுள்ளது.

பாமக அன்புமணி
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வரும் அதிமுக, அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. திமுகவுக்கு பின்பாக தொகுதி பங்கீட்டை ஆரம்பித்தாலும், மிக விரைவாக கூட்டணிக்கான சீட்டுகளை ஒதுக்கி விட்டது அதிமுக. இதனையடுத்து கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது பற்றிய அறிவிப்பையும் அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்த முதல்கட்ட பட்டியாலை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அவர் வந்தார். தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன், பாரிவேந்தர், பூவை ஜெகன் மூர்த்தி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் அங்கு வருகை தந்தனர்.

இதனையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்தான அறிவிப்பினை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 18 தொகுதிகள் சம்பந்தமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் மேற்கு, வடக்கு மற்றும் தருமபுரி, விக்கிரவாண்டி, பென்னாகரம், திருப்போரூர், சோளிங்கர், ஜெயங்கொண்டம், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் விருத்தாசலம், செஞ்சி, போளூர், மயிலாடுதுறை, ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ் வேளூர், அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட 18 தொகுதிகள் பாமகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட்டது. இந்த முறை தேர்தலில் ஐந்து இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பாமகவில் தந்தை, மகன் இடையில் மோதல் நீடித்து வந்தது.
இதன் காரணமாக தற்போது பாமக இரண்டாக உள்ளது. ராமதாஸ் தலைமையில் ஒரு பாமகவும், அன்புமணி தலைமையில் ஒரு பாமகவும் உள்ளது. இது கட்சிக்கு பலவீனமாக பார்க்கப்பட்டாலும், பெரும்பாலான பாமக நிர்வாகிகள் அன்புமணி பக்கமே உள்ளனர். இதன் காரணமாக அவருக்கு என்டிஏ கூட்டணியில் 18 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதற்கு அன்புமணி முடிவு செய்துள்ளார்.
அதோடு பாமக செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு சவுமியா அன்புமணி வட மாவட்டங்களில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது. அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் நிற்கும் இடங்களில் எதிராக வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ராமாதாஸ் தரப்பு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அன்புமணிக்கு வட மாவட்டங்களில் ராமதாஸ் தரப்பு பாமக சரியான டஃப் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் தவெக தலைவர் விஜய் நிற்க போவதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக. இங்கு அதிமுக நேரடியாக நிற்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பெரம்பூர் தொகுதியை விஜய்க்கு விட்டு கொடுத்து விட்டதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.