ஜோத்பூர்
ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்டு வந்த இளைஞர் ஜீஷன் என்பவரை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், ஆந்திர பிரதேச போலீசார் அவரை நேற்றிரவு கைது செய்தனர். இதுபற்றி காவல் அதிகாரி மனக் ராம் பிஷ்னோய் நிருபர்களிடம் இன்று கூறும்போது, ஆந்திர பிரதேச போலீசார், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகருக்கு வந்தனர்.
எங்களுடைய மூத்த அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். அவர்கள் உத்தரவின்பேரில், நாங்கள் ஆந்திர பிரதேச போலீசாருக்கு தேவையான ஒத்துழைப்பை கொடுத்தோம். வேண்டிய தகவல்களையும் பகிர்ந்தோம்.
இதனடிப்படையில், அவர்கள் இளைஞர் ஒருவரை நேற்றிரவு கைது செய்துள்ளனர். அவருடைய மொபைல் போனை ஆய்வு செய்ததில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு உள்ள தொடர்பு பற்றி தெரிய வந்தது. அந்த அமைப்பின் கருத்துகள் தொடர்பான செய்திகள் அந்த மொபைல் போனில் இருப்பதும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதுபோன்ற தகவல்களை அவர் பகிர்ந்து இருக்க கூடும் என தெரிகிறது. ஜோத்பூரில் பிறரிடமும் அவர் அவற்றை பயன்படுத்தி செல்வாக்கு செலுத்தியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
