இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள விரலி மஞ்சள், பீடி இலைகள் தூத்துக்குடியில் பறிமுதல்

தூத்துக்குடி நகர உட்கோட்டம், தாளமுத்துநகர் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

கீழஅலங்காரத்தட்டு பகுதியில் உள்ள டென்னிஸ் மனைவி ஆரோக்கியமேரி என்பவருக்கு சொந்தமான ஆஸ்பெஸ்டாஸ் சீட் வேயப்பட்ட பழைய வீட்டில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த விரலி மஞ்சள் சுமார் 20 கிலோ எடை கொண்ட 32 மூட்டைகள், பீடி இலைகள் சுமார் 15 கிலோ எடை கொண்ட 11 மூட்டைகள் ஆகியற்றை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட இந்த விரலி மஞ்சள் மற்றும் பீடி இலைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக தூத்துக்குடி சுங்கத்துறையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. கடல் வழியாக இந்தக் கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link