அமெரிக்காவுக்கு ஈரான் போட்ட ‘கண்டிஷன்’ – தொடரும் போரால் உலக நாடுகள் பதற்றம்! – iran rejects us ceasefire lists key conditions

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது.

Iran Rejects US Ceasefire(புகைப்படங்கள்Samayam Tamil)
கடந்த அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தி அந்த நாட்டின் உச்சத் தலைவரான அலி அயத்துல்லா கமேனியை கொன்றது. அன்றைய தினம் தெஹ்ரான் முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் பல பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

இதற்கு எதிர் தாக்குதல் நடத்தும் விதமாக ஈரான், அமெரிக்க தளவாடங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை தொடர்ச்சியாக தாக்கத் தொடங்கியது. அதுமட்டுமின்றி வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய மிக முக்கியமான எண்ணெய் தளவாடங்களை தாக்கி அழித்ததில் உலகம் முழுக்க பெரும் போர் பதற்றம் நிலவியது.

மேலும் இந்த போர்ப்பதற்றம் மேற்காசிய‌ நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கனவே வளைகுடா நாடுகள் அமெரிக்கா மீது அதிருப்தியில் இருப்பதால் போர் நிறுத்த நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கி இருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ஈரனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. யுரேனிய செறிவூட்டலை கைவிட்டு ஈரான் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தரப்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், ஈரான் அமெரிக்காவுடனான போர் நிறுத்த நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. ஈரானின் அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் அமெரிக்காவின் போர் நிறுத்த உடன்படிக்கைகளுக்கு ஒப்புக்கொள்ள முடியாது என ஈரான் தெரிவித்துள்ளதாகவும் மேலும் தங்களின் நிபந்தனங்களை ஏற்றால் மட்டுமே போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

ஈரான் வைத்த ஐந்து நிபந்தனைகள் என்ன?

ஈரான் தனது விருப்பப்படி நிபந்தனைகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டுவருவோம் என அறிவித்திருக்கிறது. போர் நிறுத்த நேரத்தை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது எனவும் ஈரான் உறுதியாக இருக்கிறது. மேலும் ஹார்மோஸ் நீரிணையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிரந்தர முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

நிபந்தனைகள் என்ன?

  • மீண்டும் போர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் .
  • போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
  • போரால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளின் குழுக்களையும் உள்ளடக்கி எந்த நாட்டிலிருந்தும் போர் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்ற உறுதியை கொடுக்க வேண்டும்.
  • ஹார்மோஸ் ஜலசந்தியின் மீது இறையாண்மையை காக்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஈரான் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்கா ஈரானின் மீதான தாக்குதலை தொடர்ந்தால் நிச்சயம் அதற்கு கடுமையான எதிர்வினை இருக்கும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லை!

ஏற்கனவே இந்தியா முழுக்க போர் பதற்றத்தால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரக்கூடிய சூழலில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் எந்த பதற்றமும் வேண்டாம் என ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. பெட்ரோலிய அமைச்சர்களை செயலாளர் இது குறித்து பேசுகையில் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணையுடன் இயங்கி வருவதாக தெரிவித்தார். மேலும் நாட்டில் போதுமான அளவு பெட்ரோல் டீசல் கையிருப்பு இருப்பதாகவும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே நாடு முழுக்க சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.