புதுடெல்லி
பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வாக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அவர், பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார துறைக்கான மந்திரி ஜீன்-நோயல் பேரட்டை இன்று சந்தித்து பேசினார். இதன்பின்னர், பிரான்சில் நடந்த ஜி7 வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது மத்திய கிழக்கில் காணப்படும் சூழ்நிலை பற்றி மந்திரிகள் மட்டத்தில் விரிவான முறையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவர்கள், ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இணைந்து பணியாற்றும் நோக்கில், நெருங்கிய ஒருங்கிணைப்பை தொடர சம்மதம் தெரிவித்தனர்.
பிரான்சில் வருகிற ஜூன் 15 முதல் 17 வரையிலான 3 நாட்களில் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது பற்றிய உறுதியான தகவல் அப்போது பகிரப்பட்டது. இந்த முடிவை ஜி7 உறுப்பு நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் வரவேற்றுள்ளனர். இதனை இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்து உள்ளது.
