புனே
மராட்டியத்தின் நாக்பூர் நகரில் ராம நவமி கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக உலக அமைதியை வேண்டி மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 4,900 பேர் கலந்து கொண்டு ஆரத்தி எடுத்து இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஓரிடத்தில் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடி ஆரத்தி எடுப்பது இதுவே முதன்முறையாகும். இதுபற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, இன்று கூட்டாக ஆரத்தி எடுத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
ராம நவமியை முன்னிட்டு ஒரு புதிய சாதனை படைக்க வேண்டும் என திட்டமிட்டு, அதற்கான வேலையில் நம்முடைய எம்.எல்.ஏ. ஆஷிஷ் தேஷ்முக் செயல்பட்டார். இதுவரை 2,500 பேர் ஒன்றாக திரண்டு மகா ஆரத்தி எடுத்தது ஒரு சாதனையாக இருந்தது. ஆனால் இன்று, 4,900 பேர் ஒன்றாக திரண்டு, ஓரிடத்தில் கூடி மகா ஆரத்தி எடுத்து, ஒரு புதிய உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று விட்டனர் என மகிழ்ச்சியுடன் கூறினார்.
