சென்னை,
உலகில் வளர்ந்த நாடுகளில் புல்லட் ரெயில் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவில், முதற்கட்டமாக மும்பை – ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நாடு முழுவதும் 17 வழித்தடங்களில் புல்லட் ரெயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதில், சென்னை – ஐதராபாத், சென்னை – மைசூரு வழித்தடங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு – கேரளா இடையே இரு வழித்தடங்களில் புல்லட் ரெயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, சென்னையில் இருந்து திருச்சி, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திற்கு முதல் வழித்தடத்தையும், சென்னையில் இருந்து சேலம், கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு 2-வது வழித்தடத்தையும் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இந்த 2 வழித்தடங்களில் புல்லட் ரெயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிக்கை தயாரிக்க தமிழக அரசு ரெயில்வே வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதவிர, விஜயவாடாவுடன் முடிவடையும் கிழக்கு கடற்கரை சரக்கு போக்குவரத்து வழித்தடத்தை சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வரை நீட்டிக்கவும் அனுமதி வழங்கக்கோரி அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
