“பராசக்தி” படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை – சென்னை ஐகோர்ட்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். இந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக ‘பராசக்தி’ திரைக்கு வந்துள்ளது. சென்சாரில் இந்தப் படத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. திரைப்படம் பிப்ரவரி 7ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தனது ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது என இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், ‘பராசக்தி’ பட கதாபாத்திரங்கள், திரைக்கதை முற்றிலும் கற்பனையானவை என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது. இந்த வழக்கில், பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 1965ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஒரு வரலாற்று நிகழ்வு. வரலாற்றுச் சம்பவங்கள் அல்லது சமூகப் போராட்டங்கள் மீது எந்த தனிநபரும் காப்புரிமையோ அல்லது தனியுரிமையோ கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்களம் வேண்டுமானால் போராட்டக் காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம், ஆனால் கதாபாத்திரங்கள், வசனங்கள் மற்றும் திரைக்கதை முற்றிலும் கற்பனையானவை மற்றும் தனித்துவமானவை என்றும் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

தனது கதையை திருடி ‘பராசக்தி’ படம் எடுக்கப்பட்டதாக இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையை வரும் .9ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. ‘பராசக்தி’ படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source link