கோவை,
கேரளத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க. மாநில தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிப்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அதாவது 2 கட்டமாக கேரளத்தில் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் பிரதமர் மோடி நாளை பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். குறிப்பாக திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அவர், ரோடு ஷோவிலும் பங்கேற்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு, கோவையின் முக்கியமான பகுதிகளில் (மார்ச் 28ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலாம்பூர், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையாறு, அவினாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூர் மற்றும் ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார்.
