19-வது ஐபிஎல் தொடர் இன்று (மார்ச் 28) பெங்களூருவில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாகக் கருதப்படும் மகேந்திர சிங் தோனிக்குக் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகப் பயிற்சியின் போது தோனி காலில் வலியுடன் காணப்பட்ட நிலையில், தற்போது அவருக்குத் தசைப்பிடிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் முதல் இரண்டு வாரங்கள் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 44 வயதான தோனிக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம், அவர் முழுமையாகக் குணமடைய கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் லீக் போட்டியில் வரும் மார்ச் 30-ஆம் தேதி (திங்கள்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. தோனி இல்லாத நிலையில் சிஎஸ்கே அணி தனது தொடக்க ஆட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் தோனியின் இடத்தை சஞ்சு சாம்சன் நிரப்புவார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

