புதுடெல்லி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தொடக்க போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டது. அவர் வேண்டுமென்றே விலகுகிறார் என்று சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் தனது காயம் மற்றும் உடல்நிலை குறித்து முக்கியமான அறிக்கை ஒன்றை ஸ்டார்க் இன்று வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஆஸ்திரேலிய கோடைகால கிரிக்கெட் தொடரின் போது தனது தோள் மற்றும் முழங்கை பகுதியில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தை அப்போது உணரவில்லை. தற்போது அதற்கான மறுவாழ்வு சிகிச்சையில் உள்ளேன்.என்னைவிட எனது உடலைப் பற்றித் தங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும் என்று சில இந்திய ஊடகவியலாளர்கள் தவறான தகவல்களை உண்மைகளைப் போலச் சித்தரித்து, வீரர்கள் குறித்து தவறான கருத்துகளைப் பரப்புகின்றனர்.
இந்தக் காயம் சரியான நேரத்தில் ஏற்படவில்லை என்பது எனக்குத் தெரியும். இது டெல்லி அணியின் திட்டங்களைப் பாதிக்கும் என்பதால், அதற்காக அணியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஆவலுடன் இருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக என்னால் ஆரம்பப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. விரைவில் முழுத் தகுதியுடன் அணியில் இணைவேன் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
