சவுதி அரேபியா இளவரசருடன் பிரதமர் மோடி உரையாடல்

புதுடெல்லி,

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குரத்து தடைபட்டது. இதன் விளைவாக பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். அவரிடம் மேற்காசியாவில் நிலவி வரும் போர் சூழல் குறித்து மோடி கேட்டறிந்தார். இது குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் குறித்து பேசினேன். பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டனம் தெரிவிப்பதாக மீண்டும் வலியுறுத்தினேன்.

கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும், கப்பல் வழித்தடங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான தேவையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். சவூதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக அவர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தேன்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source link