‘இளைஞர்கள் அனைவரும் வாக்கு செலுத்துங்கள்’ – ஜி.வி.பிரகாஷ்

கோவை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘ஹாப்பி ராஜ்’ படக்குழுவினர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கில் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் இன்று ரசிகர்களுடன் சேர்ந்து ‘ஹாப்பி ராஜ்’ படம் பார்த்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஜி.வி.பிரகாஷ், “எங்கள் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளோம். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய அவர், “தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் வாக்கு செலுத்துங்கள். வாக்கு சதவீதத்தை நாம் அதிகரிக்க வேண்டும். உங்கள் வாக்கின் முக்கியத்துவத்தை தேர்தலில் காட்டுங்கள்” என்று தெரிவித்தார்.

Source link