அவினாசி தொகுதி திமுக வேட்பாளர்: இளம் மருத்துவர் கோகிலாமணியின் அரசியல் பிரவேசமும் சமூக முக்கியத்துவம் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
கல்வி மற்றும் பணிப் பின்னணி
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டத்தில் உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கோகிலாமணி. தனது மருத்துவப் படிப்பை (MBBS) முடித்த பிறகு, சுமார் மூன்று ஆண்டுகள் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுபவம் பெற்றார். அதன் பின்னரே அரசுப் பணியில் இணைந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்தார். தற்போது தேர்தல் களத்தில் இறங்குவதற்காகத் தனது பணியிலிருந்து விலகி, மக்கள் பிரதிநிதியாகத் தொண்டாற்றத் தயாராகி வருகிறார். இவரது எளிமையான அணுகுமுறையும், மருத்துவத் துறையில் இவர் கொண்டுள்ள அனுபவமும் தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமூக நீதி மற்றும் அரசியல் முக்கியத்துவம்
அவினாசி தனித் தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் கோகிலாமணி. இவரது தேர்வு வெறும் அரசியல் கணக்காக மட்டுமன்றி, ஒரு ‘சமூகச் சீரமைப்பு’ நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் இவரது சொந்த ஊரான திருமலைக்கவுண்டன்பாளையம் ஆகும். கடந்த 2018-ஆம் ஆண்டு, இந்தப் பகுதியில் அரங்கேறிய தீண்டாமைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சமைப்பவராகப் பணியாற்றிய பாப்பாள் என்பவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தங்கள் பிள்ளைகளை அந்தச் சத்துணவை உண்ண விடாமல் தடுத்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
எதிர்கால எதிர்பார்ப்புகள்
அத்தகைய தீண்டாமை வன்கொடுமை நடந்த அதே மண்ணிலிருந்து, இன்று ஒரு பெண் மருத்துவர் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடுவது சமூக முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. கல்வியும் அதிகாரமும் மட்டுமே ஒடுக்குமுறைக்கு எதிரான சிறந்த ஆயுதம் என்பதை நிரூபிக்கும் வகையில் கோகிலாமணியின் வேட்புமனு அமைந்துள்ளது. தொகுதியில் நிலவும் குடிநீர்ச் சிக்கல், விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் தொழிலாளர் நலன் ஆகியவற்றுடன் சமூக நீதியையும் முன்னிறுத்தி அவர் தனது பிரச்சாரத்தைத் திட்டமிட்டுள்ளார்.
அவினாசி தொகுதியில் புதிய மாற்றம்
இளம் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இவருக்குக் கிடைத்துள்ள ஆதரவு, அவினாசி தொகுதியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திமுகவினர் நம்புகின்றனர். ஒரு மருத்துவராக மக்களின் உடல்நலத்தைப் பேணியவர், இனி சட்டமன்றத்தில் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பார் என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
