நைரோபி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் இந்த மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளக்காடானது.
பல்வேறு இடங்களிலும் நீர் சூழ்ந்தது. குடியிருப்புகள், கட்டிடங்கள் ஆகியவை நீரில் மூழ்கின. வாகனங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. மின் வினியோகம் தடைபட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவையும் கடுமையாக பாதிப்படைந்தது.
கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளை அடுத்து, 2,700 குடும்பங்கள் பாதுகாப்பு தேடி வேறு பகுதிகளுக்கு சென்று விட்டன. வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 108 பேர் பலியாகி உள்ளனர். இதனை கென்ய தேசிய போலீசார் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. ஒரு சில பகுதிகளில் மழை ஓய்ந்தபோதும், கழிவுநீர் ஓடைகளில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தரை பகுதியை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வெள்ளத்தின் பாதிப்பு தொடர்கிறது என்று மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை தெரிவித்து உள்ளனர்.
