ஐக்கிய அரபு அமீரகம் மீது 16 ஏவுகணைகள், 42 டிரோன்களை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்

அபுதாபி,

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மீது 16 ஏவுகணைகள், 42 டிரோன்களை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இவை அனைத்தையும் தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமீரக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“ஈரானில் இருந்து ஏவப்பட்ட 16 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 42 ஆளில்லா விமானங்களை(டிரோன்கள்) ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளது.

ஈரானின் அடாவடித்தனமான தாக்குதல் தொடங்கியதில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இதுவரை 414 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ்(Cruise) ஏவுகணைகள் மற்றும் 1914 டிரோன்களை எதிர்கொண்டுள்ளன.

இந்த தாக்குதல்களின் விளைவாக, தங்களது தேசிய கடமையை ஆற்றிக்கொண்டிருந்த 2 ஆயுதப் படை வீரர்களும், ஒரு பொதுத்துறை ஒப்பந்த அதிகாரியும் வீரமரணம் அடைந்தனர். மேலும் 8 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 178 பேர் காயமடைந்தனர்.

எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதையும், அதன் தேசிய நலன்களையும், திறன்களையும் பேணுவதையும் உறுதிசெய்யும் வகையில், நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் உறுதியாக எதிர்கொள்வோம்.”

இவ்வாறு அமீரக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source link