காபூல்,
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இமாம்கார் நகரில் மசூதி ஒன்றில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தபோது, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், 31 பேர் பலியானார்கள். 169 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் கூறும்போது, கொடூர குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்திய நபர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டவர். எல்லை கடந்த பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர். இதற்கு வலிமையான பதிலடி தரப்படும் என கூறினார்.
இதற்கு பதிலளித்த தலீபான் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளரான இனயதுல்லா குவாராஜ்மி கூறும்போது, பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தானிய அதிகாரிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இதுபோன்ற தாக்குதல்களை முன்பே தடுக்க தவறிய அவர்கள், விரைவாக எப்படி வெளிநாட்டு தொடர்பு என குற்றம் சாட்ட முடிகிறது என அவர் கேள்வி எழுப்பினார். இந்த குற்றச்சாட்டுகளால் பாகிஸ்தானில் காணப்படும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்புடைய சவால்களை மூடி மறைக்க முடியாது என்றும் கூறினார்.
குடிமக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என்றும் கூறினார். இதற்கு முன்பு, இந்த தாக்குதலுக்கு இந்தியாவை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன், குற்றச்சாட்டை நிராகரித்தும் உள்ளது.
