மகாவீரர் ஜெயந்தி – செல்வப்பெருந்தகை வாழ்த்து

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர், தனது அரச வாழ்வை துறந்து, அவரது செல்வத்தையெல்லாம் மக்களுக்கு தானமாக வழங்கியவர். அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் வளர்க்கப்பட்ட வெறுப்பு, கசப்பு உணர்வுகளை வீழ்த்துவதற்கு நம்மிடையே இருக்கிற மிகச் சிறந்த சித்தாந்தங்களில் ஒன்று மகாவீரர் அவர்கள் வழங்கிய போதனைகள் தான். எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதை அவர் மக்களுக்கு போதித்தார். அந்த போதனைகள் தான் இன்றைக்கு இந்தியாவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க பெரிதும் உதவும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் மகாவீரர் அவர்களின் போதனைகள் நாட்டில் பரப்பப்பட வேண்டும் என்பதே பிறந்தநாள் செய்தியாகும்.

அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்நாளில், தமிழகத்தில் அவரின் போதனைகளை பின்பற்றி வாழும் சைன சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link