சாத்தான்குளம் வழக்கில் தண்டனை ஒத்திவைப்பு – அறிக்கை சமர்ப்பிப்பதில் மத்திய மாநில அரசுகள் தாமதம்! – sathankulam custodial death case sentencing postponed over report delay

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒன்பது காவலர்களும் குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியிருந்த சூழலில், இன்றைய தினம் தண்டனை விவரங்கள் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த வழக்கு வருகின்ற ஏப்ரல் இரண்டாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

Jayaraj and Bennix Case(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் அதிக அளவிலான காவல் விசாரணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் ஒன்றுதான் சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்தசூழலில் தண்டனை விவரங்கள் இன்றைய தினம் வெளியாகும் என சொல்லப்பட்ட சூழலில் மத்திய மாநில அரசுகள் அறிக்கை சமர்ப்பிக்காததால் வருகிற இரண்டாம் தேதி குற்றவாளிகளின் தண்டனை விவரங்கள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

சாத்தான்குளம்: கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய யும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் தந்தை மகன் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்திருந்தனர். ஆனால் போலீசார் நடத்திய தாக்குதலில் கோவில்பட்டி சிறைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து மாநிலம் முழுக்க பெரும் போராட்டத்திற்கு வழி வகுத்தது. இந்த வழக்கை 2020 -ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க தொடங்கியது. அதன் பிறகு சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றலாம் என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த விசாரணையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமை காவலர் முருகன் உள்ளிட்ட 10 – பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ 105 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டு 2427 பக்க குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. இந்த சூழலில் ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் 23 -ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்திருக்கிறார். அதில் ஒரு காவலர் விசாரணை காலத்திலே உயிரிழந்துவிட்டதால் மீதமுள்ள 9 -பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் இன்று வெளியாகும் என சொல்லப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளின் சொத்து விவரங்களை மத்திய மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் ஏற்கனவே கேட்டிருந்தது.
ஆனால் தீர்ப்பு வெளியான பிறகும் அறிக்கையை மத்திய மாநில அரசுகள் சமர்ப்பிக்கவில்லை. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சொத்து விவரங்களை தங்களால் சமர்ப்பிக்க முடியவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த நீதிபதி அறிக்கை வந்தால் தான் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையா அல்லது எந்த விதமான தண்டனை கொடுக்க முடியும் என தெரிவித்தார். .

மேலும் இரண்டாம் தேதி கட்டாயமாக மத்திய மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.