கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
இதனிடையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் சீட் கிடைக்காத காரணத்தால் சில உறுப்பினர்கள் அதிருப்தியுடன் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். அதே போன்று ஒரு சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளாராக ராஜீவ்காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை அறிமுகம் செய்து வைக்கும் செயல் வீரர் கூட்டம் கள்ளக்குறிச்சியில் இன்று நடந்துள்ளது.
நகர செயலாளர் பாபு ராஜினாமா
அப்போது கள்ளக்குறிச்சி நகர செயலாளரான பாபு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கி விட்டு தரையில் விழுந்து வணங்கி கண்ணீருடன் சோகமாக வெளியேறியுள்ளார் நகரச் செயலாளர் பாபு.
மன உளைச்சல்கள் காரணமாக எடுத்த முடிவு
தன்னுடைய ராஜினிமா குறித்து அவர் கூறுபோது, “தனிப்பட்ட முறையில் பல மன உளைச்சல்கள் இருந்தாலும், கழகம் வெற்றி பெற வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. அதே நேரம் எனக்கு நகர செயலாளராக தொடர்ந்து பணியாற்றுவதற்கு மனமில்லை. தம்பி ராஜீவ் காந்தியை அனைவரும் இணைந்து வெற்றி பெற செய்ய வேண்டும். என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
மகளிரணி தலைவர்
கள்ளக்குறிச்சி தொகுதியில் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுவின் மனைவி அழகுவேலு. இவர் மாவட்ட மகளிரணி தலைவர் பொறுப்பும் வகித்து வந்தார். அவரும் தற்போது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நகர செயலாளர் பாபு அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், “கள்ளக்குறிச்சி கழக செயலாளர் ஆகிய நானும், எனது மனைவி திருமதி முன்னாள் எம்எல்ஏ அழகுவேல் பாபு மாவட்ட மகளிரணி தலைவர் நாங்கள் இருவரும்,
ராஜினாமா கடிதம்
பல்வேறு மன உளைச்சல் காரணமாக கழக பணியாற்றிட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கழக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறோம் என்று அந்த ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மன உளைச்சலால் தெரிவித்து அவர் வெளியேறியுள்ளது கள்ளகுறிச்சி அதிமுகவில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. கட்சியின் உட்கட்சி கோஷ்டி பூசல் காரணமாக அவர் ராஜினாமா செய்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை மத்திய தொகுதி
இதனிடையில் அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சீட்டில் வேட்பாளாராக இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் மதுரை மத்திய தொகுதி அதிமுகவில் ஒதுக்கப்படாமல், புதிய நீதி கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
