சென்னை,
வருகிற தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.சு, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் தொடர்பாக இயக்குனர் சேரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது.
எனக்கு சீமானும், அவரின் தம்பி, தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது… ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது, நல்வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது, ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது, எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும். ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த கால அரசுகள் கைவிட்டு விட்டு வெறும் இலவசங்களை ஆசைகாட்டி வாக்கு வாங்கி தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்து விட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.
கொள்ளையையும், அலட்சியங்களையும், போதை புழக்கத்தையும், வன்முறைகளையும் தட்டிக் கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை. அந்த குரல் சீமானின் குரலாகவும், சீமானின் தம்பி, தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும், அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள். ஆகவே இந்த தேர்தலில் நா.த.க வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள், அந்த குரல்கள் நமக்கான குரல்கள். வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.
இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம். தலைமுறை தலை முறையாக ஆட்சி நடத்துப்வர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம். நம் பிள்னைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினைக்கும் இளைஞர்களை உருவாக்கிகொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். சிந்திப்போம் நம்மை நாமே ஆள்வோம். கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா? நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா? இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.
