தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், இன்னமும் பாஜக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படாமல் இருக்கின்றனர். இதனிடையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் தற்போது சென்னை கமலாயத்தில் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
பாஜக ஆலோசனைக் கூட்டம்
இதன் காரணமாக பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்தான அறிவிப்பு வெளியாவது மேலும் தாமதமாகிறது. இந்நிலையில் பாஜக ஆலோசனை கூட்டம் தற்போது சென்னையில் உள்ள கமலாயத்தில் துவங்கியுள்ளது. இதனிடையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் பூயூஷ் கோயல் தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர், ஹெலிகாப்டர் மூலமாக அவசரமாக சென்னை கிளம்பி வந்துள்ளார்.
அண்ணாமலைக்கு அவசர அழைப்பு
இந்நிலையில் பாஜக வேட்பாளர்கள் தேர்வு ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். அவர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என டெல்லி தலைமையிடம் கூறியிருந்த நிலையில், தற்போது அண்ணாமலை ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதன் மூலமாக சட்டமன்ற தேர்தலில் அவரை போட்டியிட வைப்பதற்காக பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவையில் போட்டியிட விருப்பம்
அதோடு அண்ணாமலைக்கு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அவசர அழைப்பு கொடுத்துள்ளது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக அண்ணாமலை கோவையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்தார். குறிப்பாக சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய இரண்டில், ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக திட்டமிட்டு இருந்தார்.
வானதி சீனிவாசன் போட்டி
ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவையில் ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதன்படி, கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கடந்த முறை தெற்கில் நின்று வெற்றி பெற்ற சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன் வேட்பாளாராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடுமையாக அதிருப்தி அடைந்தனர்.
பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்
இதனை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவெடுத்து, அதனை கடிதம் வாயிலாகவும் பாஜக தலைமையிடம் தெரிவித்தார் அண்ணாமலை. அதிமுக ஒதுக்கியுள்ள பெரும்பாலான தொகுதிகள் பாஜகவுக்கு சாதகமில்லை என்றும், இதனால் தனக்கு சீட் வேண்டாம் என்றும் அவர் கட்சி தலைமையிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் பியூஷ் கோயல்
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தற்போது பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரியில் இருந்து வருகை தந்துள்ளார் அண்ணாமலை. இதனால் சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனிடையில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பாஜக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனையடுத்து நாளை பாஜக வேட்பாளர்கள் பட்டியலை பியூஷ் கோயல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
