இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டி
தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் இரண்டு இடங்களில் போட்டியிடவுள்ளார். பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அவருடைய இந்த முடிவு அரசியல் களத்தில் சில விமர்சனங்களை கிளப்பியுள்ளது. தோல்வி பயம் காரணமாக அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக பிறக்கட்சியை சார்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நாதக சீமான் விமர்சனம்
திமுக, தவெக இடையில் தான் போட்டி என தொடர்ந்து பேசி வரும் நிலையில், விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவருக்கு பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நம்பிக்கை இல்லாமல் இரண்டு தொகுதிகளில் போட்டி போடுவதாக தவெக தலைவர் விஜய்யை விமர்சித்துள்ளார். இது சம்பந்தமாக கோவை பரப்புரையில் பேசிய சீமான், “தன்னையும், மக்களையும் நம்பாதவன் தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவான் என கடும் விமர்சனம் செய்துள்ளார். அதோடு நான் மாஸ், பிளாஸ்டு, உச்சம் என வசனம் பேசினால் போதாது.
ஒரே தொகுதியில் போட்டியிட வேண்டும்
பெரிய ஹீரோ என்றால் ஒரே தொகுதியில் நிற்க வேண்டும். நம்பிக்கை வேண்டும். நம்ம வெல்லுவோம். நம்பிக்கையோட இருங்கள் என்று சொல்லிவிட்டு, உனக்கே நம்பிக்கை இல்லை. எதுக்கு இரண்டு தொகுதிகளில் போய் நிற்க வேண்டும். ரெண்டு முறை நின்று நான் தோற்று போயுள்ளேன். ஆனாலும் ஒரே தொகுதியில் தான் போட்டி போடுகிறேன். இவ்வாறு விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டி போடுவது சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சீமான்.
நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கி
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகையின் காரணமாக நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி இந்த தடவை சரிவை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரைக்கும் நாதகவுக்கு ஆதரவு அளித்து வந்தவர்களில் பெரும்பாலானோர்கள் இளைஞர்கள். அவர்களுடைய ஆதரவு தற்போது தவெக பக்கமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு முன்னாடி இருந்த ஆதரவுகள் குறைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு ஆதரவாக குரல்
இதனையடுத்து தற்போது அரசியல் களத்தில் தவெகவையும், அதன் தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவர் இரண்டு இடங்களில் போட்டியிடுவதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சீமான். அதே நேரம் விஜய்யின் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, பாதுகாப்பு அளிப்பதில் குறைவு போன்ற சம்பவங்களின் போது விஜய்க்கு ஆதரவாகவும் சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார் சீமான்.
திருச்சி கிழக்கு தொகுதி
இதற்கிடையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பிரச்சாரத்தையும் துவங்கினார் விஜய். அதே நாளில் கொளத்தூர் பரப்பர்புரையிலும் ஈடுபட்ட நிலையில், வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்து பரபரப்புரையில் ஈடுபடவுள்ளார் விஜய். இதனிடையில் இங்கு திமுகவுக்கு ஆதரவாகவே மக்கள் இருப்பதாக அமைச்சர் கே.என். நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
