சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சென்ற அவர், அங்கு காய்கறி வியாபாரிகள், பொதுமக்களிடம் தி.மு.க. சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜுக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து சாலையோரம் இருந்த ஒரு தேநீர் கடையில் அவர் தேநீர் குடித்தார். இந்த நிலையில் இதனை குறிப்பிட்டு ‘தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது.இதுதான் நாம் வளர்ந்த இடம், அரசியலையும் உலக நடப்புகளையும் அறிந்து கொண்ட இடம்! டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் = திமுக-வின் unofficial கிளைக் கழகங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.
