ரேஷன் கடையில் ஜன்னலை உடைத்து அரிசியை தின்ற காட்டு யானை – மசினகுடி அருகே பரபரப்பு

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் காட்டு யானை வந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை சுற்றுச்சுவரை உடைத்து தள்ளியது. அதோடு ரேஷன் கடையில் உள்ள ஜன்னலை உடைத்தது.

பின்னர் துதிக்கையை உள்ளே நுழைத்து அரிசி மூட்டைகளை தூக்கி வெளியே வீசியது. தொடர்ந்து 6 மூட்டைகளில் இருந்த அரிசியை சுவைத்து தின்றது. இதனிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தனர். பின்னர் ரேஷன் கடைக்கு விரைந்து வந்தனர். அப்போது காட்டு யானை அரிசியை தின்று கொண்டிருந்தது. இதை கண்ட பொதுமக்கள், காட்டு யானையை விரட்டினர்.

தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானை ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்று விட்டதால் அடிக்கடி அப்பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

Source link