சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் சண்டிகரின் செக்டர் 37 பகுதியில் மாநில பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், பாஜக அலுவலத்திற்கு இன்று மாலை 5 மணியளவில் பைக்கில் வந்த இருவர் தாங்கள் மறைத்து கொண்டுவந்த கையெறி வெடிகுண்டை பாஜக அலுவலகம் மீது வீசினர். வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சம்பவத்தில் பாஜக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இந்த குண்டு வீச்சு தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றனர். இந்த குண்டு வீச்சு சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று தடங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டு வீச்சு தாக்குதலுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி சுக்கிந்தர் சிங் பாபர் பொறுப்பேற்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
