8வது முறையாக ராயபுரம் தொகுதி.. வேட்புமனு தாக்கல் செய்த ஜெயக்குமார்.. வெற்றிவாகை சூடுவாரா? – admk jayakumar royapuram constituency files his nomination for 2026 assembly election

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சமீபத்தில் துவங்கியது. முதல் நாளே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதனையடுத்து தொடர்ந்து பலரும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அதே நேரம் காங்கிரஸ், பாஜக இன்னமும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாமல் இருக்கிறது.

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரும் வரும் 4 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்காக அதிமுக தலையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக, தமாகா, புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ராயபுரம் தொகுதி
இந்நிலையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்து அவர் அந்த தொகுதியில் போட்டியிடும் நிலையில், தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். 8வது முறையாக ராயபுரம் தொகுதியில் டி. ஜெயக்குமார் போட்டியிடவுள்ளார்.

ஜெயக்குமார் போட்டி
கடந்த 1991 ஆம் ஆண்டும் ராயபுரம் தொகுதியில் முதன்முறையாக டி. ஜெயக்குமார் போட்டியிட்டார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மதிவாணனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு வெற்றியை நழுவ விட்டார் ஜெயக்குமார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக மதிவாணன் வெற்றி பெற்றார். ஆனாலும் தொகுதி மாறாமல் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு ஜெயக்குமார் போட்டியிட்டு மீண்டும் வெற்றிவாகை சூடினார்.

பாஜகவே தோல்விக்கு காரணம்
இதனையடுத்து 2006, 2011, 2016 ஆம் ஆண்டுகளிலும் ராயபுரம் தொகுதியில் வெற்றியை தக்க வைத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஜெயக்குமாரே எதிர்பாராத வகையில் ராயப்புரம் மக்கள் அவருக்கு தோல்வியை வழங்கினார்கள். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ. டிரீம்ஸ் மூர்த்தி வெற்றி பெற்ற நிலையில், ஜெயகுமார் கடுமையாக அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காரணத்தால் தான் தோல்வி அடைந்ததாக வெளிப்படையாகவே ஜெயக்குமார் பேசினார்.

தொகுதி மாறப்போவது கிடையாது
இது பாஜகவினர் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஜெயக்குமார் கருத்துக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஜெயக்குமார் தொகுதி மாறி போட்டியிட வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக மயிலாப்பூர் தொகுதியில் அவர் போட்டியிடலாம் என அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை மறுத்த ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
எட்டாவது முறையாக ராயபுரத்தில் போட்டி
அவர் சொன்னதை போன்றே 2026 சட்டப்பேரவை தேர்தலில் ராயபுரம் தொகுதியிலே போட்டியிட உள்ளார். இந்த முறை எப்படியாவது இங்கு வெற்றிவாகை சூட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜெயக்குமார். அதே நேரம் கடந்த தடவை பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வியை தழுவியதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், இந்த முறையும் பாஜக கூட்டணியுடன் தேர்தலை ஜெயக்குமார் எதிர்கொள்ளவுள்ளார். இதனால் ராயபுரம் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனை கடந்து ஜெயக்குமார் வெற்றி வாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..

Source link